இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரி தக்காளி சட்னி அரைக்காம.. இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.

Posted By:

Tomato Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லிக்கு பெரும்பாலும் தக்காளி சட்னி தான் பிடிக்குமா? அதை தான் எப்போதும் செய்து கொடுக்க சொல்வார்களா?

அப்படியானால் இட்லிக்கு எப்போதும் போன்று தக்காளி சட்னியை செய்யாமல், ஒருமுறை தக்காளி சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் ஒருமுறை இப்படி தக்காளி சாம்பார் செய்தால், பின் எப்போதும் இப்படி தான் செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Thakkali Sambar How To Make a Tomato Sambar For Idli Dosa

உங்களுக்கு தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* வெல்லம் - 1 சிறிய துண்டு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கடலை மாவை சேர்த்து குறைவான தீயில் வைத்து, நன்கு கிளறி விட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு நீரை ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 16, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion