புளி ஊற வெக்காம.. டக்குன்னு ரசம் வெக்கணுமா? இந்த ஒரு பொடி மட்டும் அரைங்க போதும்..

Posted By:

Instant Thakkali Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப்பிரியர்களா? இதனால் தினமும் உங்கள் வீட்டில் ரசம் வைப்பீர்களா? பொதுவாக ரசம் வைக்க புளியை ஊற வைத்து தான் செய்வோம். ஆனால் புளி எதுவும் ஊற வைக்காமலேயே ரசத்தை வைக்கலாம் என்பது தெரியுமா?

அதற்கு ஒரு ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் போதும். நொடியில் ரசத்தை வைத்துவிடலாம். குறிப்பாக இந்த ரசப்பொடியை பேச்சுலர்கள் செய்து வைத்துக் கொண்டால், ரசம் வைக்க தெரியவில்லை என்று புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது.

Thakkali Rasam How To Make an Instant Tomato Rasam Recipe

இப்போது உங்களுக்கு இன்ஸ்டன்ட் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இன்ஸ்டன்ட் தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ரசப்பொடி செய்வதற்கு...

* புளி - 75 கிராம்
* மிளகு - 1 கப்
* சீரகம் - 1 1/2 கப்
* கட்டி பெருங்காயம் - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மஞ்சள் தூள் - 1 1/2 சிட்டிகை

ரசத்திற்கு...

* ரசப்பொடி - 2 குழிக்கரண்டி
* பெரிய தக்காளி - 2
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ரசப்பொடி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், கட்டிப் பெருங்காயம், வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் புளியை சேர்த்து, அத்துடன் வறுத்த பொருட்களை சேர்த்து, அதோடு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொடியை ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* நன்கு குளிர்ந்த பின், ஒரு காற்றுப்புகாத டப்பாவில் பொடியைப் போட்டுக் கொள்ளுங்கள்.
* அடுத்து ரசம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 தக்காளியை வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலை, 2 கரண்டி ரசப்பொடியை சேர்த்து, கைகளால் தக்காளியை நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின்பு அதில் ரசத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து, நுரைக்கட்டி வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தக்காளி ரசம் தயார்.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள ரசப்பொடியை ஒருமுறை செய்து வைத்துக் கொண்டால், புளி ஊற வைக்கத் தேவையே இல்லை. நொடியில் ரசம் வைத்துவிடலாம்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 31, 2025, 14:39 [IST]
Desktop Bottom Promotion