இப்படி ஒருவாட்டி தக்காளி ரசம் வையுங்க.. வேறு எந்த குழம்பும் கேட்கமாட்டாங்க...

Posted By:

Thakkali Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் வைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் வைப்பீர்களா? இப்படி எப்போதும் ஒரே மாதிரி ரசம் வைத்தால், பின் ரசம் சாப்பிடும் ஆசையே போய்விடும். எனவே அவ்வப்போது வித்தியாசமான சுவையுடன் ரசத்தை செய்ய வேண்டும். ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தக்காளி ரசம்.

இந்த தக்காளி ரசத்திற்கு புளி சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. அப்படியே சேர்த்தால், சிறிய துண்டு தான் சேர்ப்பார்கள். எனவே உங்கள் வீட்டில் ஒருவேளை புளி தீர்ந்துவிட்டால், அப்போது தக்காளி ரசத்தை வையுங்கள். அதுவும் இந்த சுவையில் தக்காளி ரசத்தை வைத்தால், வேறு எந்த குழம்பும் கேட்கமாட்டார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும்.

Thakkali Rasam How To Make a Tasty Tomato Rasam Recipe

உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 300 மிலி
* பழுத்த தக்காளி - 3
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப

இடிப்பதற்கு...

* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெருங்காயத் தூள் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 300 மிலி நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 3 தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறு துண்டு புளி சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு இடி உரலை எடுத்து, அதில் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து தட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து தட்டி, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளி வேக வைத்த நீர் ஆறியதும், அதை அப்படியே கைகளால் பிசைந்துவிட்டு, எஞ்சிய தக்காளி தோலை நீக்கிவிட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் தட்டி வைத்துள்ள மிளகு பூண்டு விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் கரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்றி, 1 டம்ளர் நீரை ஊற்றி, நுரை கட்டி கொதிக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தக்காளி ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, March 28, 2025, 15:49 [IST]
Desktop Bottom Promotion