தமிழ் புத்தாண்டிற்கு இந்த புதுவிதமான பாயாசத்தை செஞ்சு.. வீட்டுல இருக்குறவங்கள அசத்துங்க...

Posted By:

Tamil New Year Special Payasam: தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. அதுவும் இந்த ஆண்டு விசுவாவசு வருடம் பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் அனைவரும் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அப்படி உங்கள் வீட்டிலும் சாப்பிடுவீர்களானால், அப்போது வழக்கமாக செய்யும் பாயாசத்தை செய்யாமல், இந்த புத்தாண்டு ஸ்பெஷலாக பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசத்தை செய்யுங்கள்.

இந்த பாயாசம் சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இதுவரை நீங்கள் செய்திராத வகையிலும் இருக்கும். இந்த பாயாசத்தை செய்தால், நிச்சயம் வீட்டில் உள்ளோரின் பாராட்டுக்களைப் பெறலாம்.

Tamil New Year Special Payasam How To Make a Pasiparuppu Javvarisi Carrot Payasam Recipe

உங்களுக்கு பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நைலான் ஜவ்வரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1/2 கப்

பாயாசத்திற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* தேங்காய் - 1 கைப்பிடி
* கேரட் - 1
* உப்பு - சிறிது
* தேங்காய் பால்/காய்ச்சிய மாட்டுப்பால் - 2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நைலான் ஜவ்வரிசியை எடுத்து நீரில் கழுவி, பின் அதில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் பாசிப்பருப்பை எடுத்து கழுவி, அதில் நீரை ஊற்றி, அதையும் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் பொடித்த வெல்லத்தை எடுத்து, அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து குக்கரில் ஊற வைத்த நைலான் ஜவ்வரிசி மற்றும் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் 1 கைப்பிடி நறுக்கிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துருவிய கேரட்டை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து, பின் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, இறக்கி 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 2 கப் தேங்காய் பால் அல்லது காய்ச்சிய மாட்டுப்பால் சேர்த்து கிளறி, அத்துடன் முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கலந்தால், சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி கேரட் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, April 12, 2025, 15:03 [IST]
Desktop Bottom Promotion