'சுநந்தினி'- இளநீர் சர்பத்

By Maha

பொதுவாக இளநீர் சாப்பிட்டால், உடலின் வெப்பம் தணிக்கப்பட்டு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இளநீரை சற்று வித்தியாசமாக குடிக்க நினைத்தால், அதனை சுநந்தினி என்னும் சர்பத் போன்று செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த பானத்தை காலையில் அல்லது மதிய வேளையில் குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும். அதையே மதிய வேளையில் குடித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஏனெனில் இந்த பானமானது பல்வேறு மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது. சரி, இப்போது அந்த சுநந்தினி என்னும் இளநீர் சர்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

"SUNANDINI"- Tender Coconut Water Sherbat

தேவையான பொருட்கள்:

இளநீர் - 2
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
புதினா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை இலை - 1-2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (விதையை நீக்கிவிடவும்)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்ழுன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, மிளகு, பெருங்காயத் தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, லேசாக வறுத்து இறக்கி, குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் அரைத்த பொடி, நாட்டுச்சர்க்கரை, உப்பு மற்றும் தேவையான அளவு இளநீர் ஊற்ற நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை இளநீரில் வேண்டிய அளவு சேர்த்து கலந்து, எலுமிச்சை இலைகளையும் அத்துடன் சேர்த்து நன்கு கிளறி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

இறுதியில் அதனை வடிகட்டினால், சுநந்தினி என்னும் இளநீர் சர்பத் ரெடி!!!

குறிப்பு:

இந்த சர்பத்தை செய்த பின்னர், மண் பானையில் ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் குடித்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் இன்னும் ஏராளம்.

Story first published: Friday, October 18, 2013, 18:03 [IST]
Desktop Bottom Promotion