சுவையான மைதா அல்வா

By Maha

Maida Halwa
வீட்டிற்கு வரும் விருந்தினரை அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படி நினைத்தால் அதற்கு வீட்டில் இருக்கும் மைதாவை வைத்து ஒரு சுவையான, இனிப்பான அல்வாவை செய்து அசத்துங்கள். அந்த சுவையான மைதா அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 1 கிலோ
கேச‌ரி பவுடர் - 1/4 டீஸ்பூன்
உருக்கிய நெய் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8

செய்முறை:

முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையாமல், இளக்கமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு பிசைந்த அந்த மாவை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீரை மாவு மூழ்கும் அளவிற்கு ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பின் மாவானது நீரில் ஊறியதும், அந்த மாவை கை விட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மேலே இருக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.

ஆகவே இவ்வாறு ஒரு 1 1/2 லிட்டர் மைதாப் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மைதா அல்வாவை மைதா பாலை வைத்து தான் செய்ய வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது கொதித்து நுரைநுரையாக வரும் போது, தீயைக் குறைத்து அதில் மைதாப் பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.

இவ்வாறு ஒரு 5 நிமிடம் கிளறியதும், பின் அதில் கேசரி பவுடர், நெய் சேர்த்து கெட்டியாக கிளறவும். அல்வா பதம் வந்ததும், அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான மைதா அல்வா ரெடி!!!

Story first published: Thursday, June 28, 2012, 12:55 [IST]
Desktop Bottom Promotion