தீபாவளிப் பலகாரங்கள்

By Super

தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசுகளைப் போல, பலகாரங்களும் அதி முக்கியமானவை.

தீபாவளியன்று செய்யப்படும் சில பலகார வகைகளைப் பற்றி இங்கு பார்ப்போம் (செய்து, ருசித்து சாப்பிடவும் செய்யலாம்)

1. சீயம்:

தேவையான பொருட்கள்:

மேல் மாவு தயாரிக்க

பச்சரிசி - 1 ஆழாக்கு.
உளுந்து - 1 ஆழாக்கு.
உப்பு - 1 ஆழாக்கு.

பூரணம் தயாரிக்க (சீயத்திற்குள் இருப்பது):

பெரிய தேங்காய் - 1.
வெல்லம் - கால் கிலோ.
ஏலக்காய் - 5 (பொடித்தது)
நெய் - 4 டீ ஸ்பூன்.
எண்ணை - பொறிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பூரணம் - தேங்காயை பூப் போல துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தைப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டு, ஈரச் சத்து போகும் வரை கிளறவும்.

அத்துடன், பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி, ஏலக்காய்த் தூளை சேர்த்து, உருண்டு வரும் போது கிளறி இறக்கி ஆற வைக்கவும். இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம்.

மேல் மாவிற்கு - பச்சரிசியையும், உளுந்தையும் ஒன்றாகக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அதை மிக்சியில் நைசாக வரும் வரை அரைக்கவும். பின்னர் கரைத்த மாவில், துளி உப்புச் சேர்த்துக் கலக்கவும்.

சேர்த்த பூரணத்தை சிறு எலுமிச்சம் பழ அளவு உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்ததும், உருட்டி வைத்ததை மாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் போட்டுப் பொரிக்கவும். அடுப்பை நிதானமாக எரிய விடுவது அவசியம்.

சுவையான சீயம், சூடாக ரெடி.


2. இனிப்புச் சீடை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 ஆழாக்கு.
வெல்லம் - 2 ஆழாக்கு (பொடித்தது)
பொட்டுக் கடலை - கால் ஆழாக்கு.
ஏலக்காய்த் தூள் - 6 (பொடித்தது)
தேங்காய் - 1 மூடி.
எண்ணை - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நீரை வடித்து விட்டு ஈர அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.

பொட்டுக் கடலையை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி பாகு வைக்கவும்.

பாகில் ஈர அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கிளறவும். அதனுடன் பொட்டுக் கடலை மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணை ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளைப் போட்டு பொன்னிறம் வருமாறு பொரித்து எடுக்கவும்.

'கரக் மொறுக்' ஸ்வீட் சீடை ரெடி!


3. கை முறுக்கு

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 ஆழாக்கு.
உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு.
தேங்காய் எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
வெண்ணெய் - 100 கிராம்.

செய்முறை:

அரிசியை நன்றாக களைந்து தண்ணீர் ஊற்றி, ஊற வைத்து அதை எடுத்து நிழலில் உலர்த்தி, ஈரமாக இருக்கும் போதே மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து, அதையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்புப் போட்டு வெண்ணெய் சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை எடுத்து கையால் முறுக்காகச் சுற்றவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

நறுக்கான முறுக்கு தயார்.


4. தட்டை

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 4 ஆழாக்கு.
பொட்டுக் கடலை - 1 ஆழாக்கு.
கடலைப் பருப்பு - 100 கிராம்.
தேங்காய் - 1 மூடி.
உப்பு, எண்ணை - தேவையான அளவு.
தனி மிளகாய்த் தூள் - 4 ஸ்பூன்.
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்.

செய்முறை:

புழுங்கல் அரிசியைக் களைந்து, ஊற வைத்து, உப்பு சேர்த்து கிரைண்டரில் நன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பை ஊற வைக்கவும். பொட்டுக் கடலையை மிக்சியில் பவுடராக்கி சலித்து எடுக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, ஊற வைத்த கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், தனி மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். உருட்டிய உருண்டைகளை பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டைகளாகத் தட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். காரத்துடன் சாப்பிட்டால் மொறுமொறுவென சுவையாக இருக்கும்.


தீபாவளி மருந்து:

இதெல்லாம் சாப்பிட்ட பின்னர் வயிறு 'சிறப்பாகவும், சீராகவும்' இருக்க வேண்டாமா. அதற்காகத்தான் 'தீபாவளி மருந்து'. அதை எப்படிச் செய்வது என்பதை இங்கே பார்ப்போம் ...

தேவையான பொருட்கள்:

உலர்ந்த இஞ்சிப் பொடி - 1 டீ ஸ்பூன்.
ஜீரா - 1 டீ ஸ்பூன்.
மிளகுப் பொடி - 1 டீ ஸ்பூன்.
நெய் அல்லது உப்பு சேர்க்காத வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
கரிவேப்பிலை விதை - 1 டேபிள் ஸ்பூன்.
வெல்லம் - 5 டீ ஸ்பூன்.

செய்முறை:

மிதமான சூட்டில் நெய்யை சூடு செய்யவும்.

அதில் இஞ்சிப் பொடி, ஜீரா, மிளகுத் தூளை சேர்க்கவும்.

இவற்றை நன்கு வறுக்கவும். பிறகு வெல்லம் மற்றும் கரிவேபிப்பிலை விதையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து, அந்தக் கலவையை ஸ்பூனால் புரட்டிப் பார்க்க வேண்டும். அப்போது வாணலியின் கீழ் பாகம் தெளிவாகத் தெரிந்தால், அதாவது கலவை ஒட்டிக் கொள்ளாமல் இருந்தால், மருந்து தயார் என்று அர்த்தம்.

இந்தக் கலவை தற்போது சற்றே நீர்த்துக் காணப்படும். அதை குளிர வைத்தால் கெட்டியாக, கோந்து போல மாறி விடும்.

தீபாவளி பட்சணங்களை சாப்பிட்டு முடித்த பின்னர் இந்த மருந்தையும் சாப்பிட்டால் சாப்பிட்ட பலகாரம் அனைத்தும் ஜீரணமாகி விடும்.

Desktop Bottom Promotion