எப்பவும் வெறும் சப்பாத்தியை செய்யாம.. ஒருமுறை இப்படி சப்பாத்தியை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது..

Posted By:

Sweet Potato Chapati Recipe In Tamil: இரவு நேரத்தில் பெரும்பாலானோரின் வீடுகளில் டிபனாக சப்பாத்தி இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? எப்போதும் ஒரே மாதிரி வெறும் சப்பாத்தியை செய்து, அதற்கு சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சப்பாத்தியை சற்று வித்தியாசமாக சுட்டு சாப்பிடுங்கள்.

அதுவும் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தியை செய்யுங்கள். இந்த சப்பாத்திக்கு சைடுடிஷ் எதுவுமே தேவைப்படாது. அந்த அளவில் சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Sweet Potato Chapati How To Make a Sweet Potato Chapati Recipe

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஆவியில் வேக வைத்து எடுத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கைகளால் நன்கு கட்டிகளின்றி மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா மிளகாய் தூள், எள்ளு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு கோதுமை மாவை சேர்த்து, நீர் சேர்க்காமல் கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் தேய்த்து முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 6, 2024, 20:24 [IST]
Desktop Bottom Promotion