பருப்பு ஊற வெச்சு அரைக்காம.. டக்குன்னு மொறுமொறுன்னு வடை சுடலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..

Posted By:

Suraikkai Vadai Recipe In Tamil: பிள்ளைகளுக்கு காலாண்டு விடுமுறை விட்டாச்சு.. வீட்டிலேயே இருப்பதால் மாலை வேளையானதும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அதுவும் நன்கு மொறுமொறுவென்று கேட்பார்கள். அப்படி திடீரென்று உங்கள் பிள்ளைகள் கேட்கும் போது, அவர்களுக்கு சத்தான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் பிள்ளைகள் காய் எதுவும் சரியாக சாப்பிடமாட்டார்களா? அவர்களை காய் சாப்பிட வைக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இந்த வடைக்கு எந்த பருப்பையும் மணிக்கணக்கில் ஊற வைத்து அரைத்து செய்ய வேண்டும் என்பதில்லை. சுரைக்காயுடன் வீட்டில் ஒருசில பொருட்கள் இருந்தாலே சுவையான மற்றும் மொறுமொறுப்பான வடையை சுடலாம்.

Suraikkai Vadai How To Make a Bottlegourd Vadai Recipe

உங்களுக்கு சுரைக்காய் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிஞ்சு சுரைக்காய் - 300 கிராம்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 3/4 கப்
* எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை எடுத்து, நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் ஊற வைத்த கடலைப் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து பிரட்ட வேண்டும்.
* அதன் பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். சுரைக்காய் நீர் காய் என்பதால், நீர் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
* அடுத்து அதில் எள்ளு விதைகளை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை சிறிது எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி, நடுவே ஓட்டையிட்டு, எணணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான சுரைக்காய் வடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 26, 2025, 19:00 [IST]
Desktop Bottom Promotion