உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்..

Posted By:

Summer Special Vendhaya Kali Recipe In Tamil: கோடைக்காலம் வந்துவிட்டாலே உடல் சூடு பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். உடல் அதிகமாக வெப்பமடைந்துவிட்டால், அதன் விளைவாக கண்களில் நீர் வடிதல், வயிற்று வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்நிலையில் இவற்றைத் தவிர்க்க சிறந்த வழி உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது தான். அப்படி உடல் சூட்டைக் குறைக்கும் ஒரு அற்புதமான உணவு தான் வெந்தய களி.

Summer Special Vendhaya Kali How To Make Fenugreek Kali Recipe

பாரம்பரியமாக நம் முன்னோர்கள் கோடைக்காலத்தில் உடல் சூட்டை குறைக்க இந்த வெந்தய களியை அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். அதுவும் காலையில் எழுந்ததும் இந்த வெந்தய களியை ஒரு தட்டில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளோருக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் உடல் சூடு பிடிக்கக்கூடாதெனில் இந்த வெந்தய களியை செய்து கொடுங்கள்.

இந்த பாரம்பரிய வெந்தய களி ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு உடல் சூட்டைக் குறைக்கும் இந்த வெந்தய களியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய களி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைத்து அரைப்பதற்கு...

* வெந்தயம் - 1/4 கப் அல்லது 50 கிராம்
* இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி- 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

இனிப்புக்கு...

* கருப்பட்டி - 200 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு

களிக்கு...

* தண்ணீர் - 2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் 1/4 கப் வெந்தயத்தை நீரில் 2 முறை கழுவிவிட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் இட்லி அரிசி/புழுங்கல் அரிசியை நீரில் 2 முறை கழுவி, அதில் நீரை ஊற்றி அதையும் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து, முதலில் பெரிய மிக்சர் ஜாரில் ஊற வைத்த வெந்தயத்தை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை வெந்தயத்துடன் சேர்த்து, கைகளால் நன்கு கலந்து விட வேண்டும். மாவு பதம் என்றால், இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தட்டிப் போட்டு, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த ஊற வைத்த கருப்பட்டியை அடுப்பில் வைத்து, கருப்பட்டியை நன்கு கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் நீரை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் நன்கு சூடானதும், அதில் அரைத்து வைத்துள்ள வெந்தய மாவை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். இப்படி கிளறும் போது கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
* இப்படி மாவை தொடர்ந்து 25 நிமிடம் கிளறி விட வேண்டும். மாவு தயாராகிவிட்டால், கையில் நீரை தொட்டு மாவை எடுக்கும் போது, மாவு கைகளில் ஒட்டாமல் இருக்கும்.
* மாவு தயாராகிவிட்டால், அடுப்பை அணைத்து இறக்கிவிட வேண்டும். பின் அதில் கரைத்து வைத்துள்ள கருப்பட்டியை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். அதுவும் கரண்டியால் கிளறி விடாமல், விஸ்க் கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
* பின்பு மீண்டும் அதை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். மாவானது சட்டியில் ஒட்டாமல் திரண்டு வந்தால், அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான வெந்தய களி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 23, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion