2 கப் கோதுமை மாவு இருந்தா... இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது...

Posted By:

Stuffed Paratha Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? எந்த சைடு டிஷ்ஷும் செய்யாமல், சிம்பிளாக ஒரு டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கோதுமை மாவும், வெங்காயமும் இருந்தால், அவற்றைக் கொண்டு பராத்தாவை செய்யுங்கள்.

இந்த ஸ்டப்டு பராத்தாவிற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. அப்படியே வேண்டுமானாலும், தயிரை தொட்டு சாப்பிட்டாலே அருமையாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். விருப்பப்பட்டால், இத்துடன் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து சேர்த்துக் கொள்ளலாம்.

Stuffed Paratha How To Make a Stuffed Paratha Recipe

உங்களுக்கு ஸ்டஃப்டு பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்டஃப்டு பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...

* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எள்ளு விதைகள் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எடுத்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து, நீர் சேர்க்காமல் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஊற வைத்த சப்பாத்தி மாவை 6 உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு உருண்டையை எடுத்து அதை சதுர வடிவில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் மற்றொரு உருண்டையையும் எடுத்து சதுரமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் தேய்த்த ஒன்றின் மேல் வெங்காய கலவையை வைத்து பரப்பி விட வேண்டும். பின் அதன் மேல் மற்றொரு தேய்த்த சப்பாத்தியை வைத்து ஓரங்களை அழுத்திவிட்டு, பின் சப்பாத்தியை கைகளால் ஒருமுறை அழுத்திவிட வேண்டும்.
* அதன் பின் கத்தியை எடுத்து, செங்குத்தாக நான்கு பாகங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாகத்தின் மீது மற்றொரு பாகத்தை வைத்து, உருட்டி, பின் கைகளால் தட்டையாக தட்டி, கோதுமை மாவை தூவி சப்பாத்தி போன்று மீண்டும் மென்மையாக தேய்த்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று மீதமுள்ள இரண்டு வெட்டிய பாகங்களை ஒன்றன் மீது மற்றொன்றை வைத்து உருட்டை, தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள பராத்தாவை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ஸ்டப்டு பராத்தா தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 23, 2025, 20:30 [IST]
Desktop Bottom Promotion