குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. சத்து மாவு தயாரிப்பது எப்படி?

சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இதை பெரியோர்களும் சாப்பிடலாம். அதுவும் இதை காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாகவும் சாப்பிடலாம்.

Posted By:

பழங்காலம் முதலாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற சத்து மாவு தயாரிக்கப்பட்டு உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த சத்து மாவு கடைகளில் பாக்கெட் போட்டு விற்கப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் சத்து மாவில் கலப்படம் உள்ளதா இல்லையா என்பது நமக்கு சரியாக தெரியாது. அதுவே அந்த சத்து மாவை வீட்டிலேயே தயாரித்தால், முற்றிலும் சுத்தமானதாக, கலப்படமற்றதாக இருக்கும் அல்லவா?

Sathu Maavu Recipe In Tamil

சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இதை பெரியோர்களும் சாப்பிடலாம். அதுவும் இதை காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாகவும் சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே சத்து மாவு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சத்து மாவு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சத்து மாவு தயாரிப்பதற்கு..

* பச்சை பயறு - 1/2 கப்

* தினை - 1/2 கப்

* உளுத்தம் பருப்பு - 1/4 கப்

* கொள்ளு - 1/2 கப்

* கைக்குத்தல் அரிசி - 1/4 கப்

* பொட்டுக்கடலை - 1/2 கப்

* கோதுமை மாவு - 1/2 கப்

* ராகி மாவு - 1/2 கப்

* மக்கா சோளம் - 1/2 கப்

* வேர்க்கடலை - 1/4 கப்

* முந்திரி - 1/4 கப்

* பாதாம் - 1/4 கப்

* ஏலக்காய் - 10

* சுக்கு பொடி - 2 டீஸ்பூன்

சத்து மாவு செய்வதற்கு...

* சத்து மாவு பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் அல்லது பால் - 2 கப்

* சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். பின் அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.

* வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், பிளெண்டர் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை, முந்திரி, வேர்க்கடலை, பாதாம் மற்றும் ஏலக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, அதையும் மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து பொடி செய்து, அதை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மாவுகளை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து, அதையும் அந்த பொடியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சுக்கு பொடியை சேர்த்து, அனைத்து பொடிகளையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு கலந்து வைத்துள்ள பொடியை சல்லடையால் சலித்து, காற்றுப்புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு சேகரித்துக் கொண்டால், சத்து மாவு தயார்.

* இந்த சத்து மாவை செய்யும் போது சிறிது எடுத்து பாத்திரத்தில் போட்டு, அதில் பால் அல்லது நீர் சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, பின் அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், சுவையான சத்து மாவு கஞ்சி தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Friday, February 24, 2023, 15:30 [IST]
Desktop Bottom Promotion