மதியம் மீந்துப் போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த வடையை செஞ்சு சாப்பிடுங்க...

Posted By:

Leftover Rice Vada Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து பெய்து கொண்டிருக்கிறது. மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாவும், மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் சாப்பிட வடை, பஜ்ஜி ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? ஆனால் வீட்டில் பஜ்ஜி சுட கடலை மாவு இல்லையா?

மதியம் சமைத்த சாதம் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான மெதுவடையை சுட்டுக் கொடுங்கள். இந்த வடையானது உளுத்தம் மாவு கொண்டு செய்வது போன்றே நன்கு மென்மையாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். முக்கியமாக இந்த வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Rice Vadai How To Make a Leftover Rice Vada Recipe

உங்களுக்கு மதியம் மீந்து போன சாதம் கொண்டு எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதியம் மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சாதம் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி மாவு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சாதத்தை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது நீரைத் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சாதத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு அதை அப்படியே கைகளால் பிசைய வேண்டும். மாவானது மிகவும் நீராக இருந்தால், அதில் வடை மாவு பதத்திற்கு வரும் வரை தேவையான அளவு அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கைகளை நீரில் நனைத்து, பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து, அதை வடை போன்று தட்டி, நடுவே ஒரு துளையிட்டுக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடையைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அரிசி வடை தயார்.

Image Courtesy: exotic-n-easy cooking

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 19, 2024, 18:32 [IST]
Desktop Bottom Promotion