77-வது குடியரசு தினத்தன்று காலையில் இந்த மூவர்ண புட்டு செஞ்சு.. வீட்டுல சூப்பரா கொண்டாடுங்க..

Posted By:

Republic Day 2026 Special Tricolor Puttu Recipe In Tamil: இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக குடியரசு தினம் என்றாலே இனிப்புக்களை பகிர்ந்து வாழ்த்துக்களை சொல்லி கொண்டாடுவோம். அதுவும் சமையலில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், குடியரசு தினத்தன்று இந்திய கொடியின் மூவர்ண தோற்றத்தில் பலவிதமான ரெசிபிக்களை தயாரித்து, வீட்டில் உள்ளோருக்கு வாழ்த்துக்களை சொல்லி கொண்டாடுவார்கள்.

உங்களுக்கும் அப்படி மூவர்ண ரெசிபியை குடியரசு தினத்தன்று உங்கள் வீட்டில் செய்து அனைவருக்கும் கொடுக்க வேண்டுமா? அப்படியானால் காலையில் மூவர்ண புட்டு ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த புட்டு தேசிய கொடியைப் போன்ற தோற்றத்தில் அழகாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

Republic Day 2026 Special Breakfast How To Make a Tricolor Puttu Recipe

உங்களுக்கு மூவர்ண புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* அரிசி மாவு - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கேரட் - 1/2 கப்
* பிரஷ்ஷான பச்சை பட்டாணி - 1/3 கப்
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் 1 கப் அரிசி மாவை எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டால், புட்டு மாவு தயார்.
* பின் மூன்று கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூன்று கிண்ணத்திலும் அரைத்த புட்டு மாவை சமமாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 1/2 கப் துண்டுகளாக்கப்பட்ட கேரட்டை எடுத்து, அத்துடன் 1 கப் கிண்ணத்தில் உள்ள புட்டு மாவை சேர்த்து நன்கு அரைத்தால், காவி நிற புட்டு மாவு தயார்.
* அடுத்து பச்சை நிற புட்டு மாவிற்கு, மிக்சர் ஜாரில் பிரஷ்ஷான பச்சை பட்டாணியை எடுத்து, அத்துடன் 1 கப் புட்டு மாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள ஒரு கப் புட்டு மாவில் சிறிது நீரைத் தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டில் வைக்கும் படியான ஒரு சிறு கிண்ணத்தை எடுத்து, அதில் முதலில் காவி நிற புட்டு மாவை சிறிது சேர்த்து சமமாக பரப்பி விட வேண்டும். அதன் பின் வெள்ளை நிற புட்டு மாவை சிறிது சேர்த்து சமமாக பரப்பி விட வேண்டும். அதன் பின்னர் பச்சை நிற புட்டு மாவை சிறிது சேர்த்து சமமாக பரப்பி விட வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இட்லி தட்டை வைத்து, அதன் மேல் இந்த கிண்ணத்தை வைத்து 5-7 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
* புட்டு வெந்ததும், அந்த புட்டு கிண்ணத்தை ஒரு தட்டில் அப்படியே கவிழ்த்தால், அழகான மற்றும் சுவையான மூவர்ண புட்டு தயார். இதை நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion