இட்லி, தோசைக்கு மாவு இல்லையா? 1 கப் சேமியா இருந்தா இப்படி பணியாரம் செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்...

Posted By:

Rava Semiya Paniyaram Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் சாப்பிடுவீர்களா? ஆனால் வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு தீர்ந்துவிட்டதா? உங்கள் வீட்டில் சேமியா உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவுடன் ரவையை சேர்த்து அட்டகாசமான சுவையில் குழிப்பணியாரம் சுடுங்கள்.

இந்த பணியாரம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Rava Semiya Paniyaram How To Make a Rava Semiya Paniyaram Recipe

உங்களுக்கு ரவா சேமியா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா சேமியா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சேமியா - 1 கப்
* ரவை - 3/4 கப்
* புளித்த தயிர் - 3/4 கப்
* தண்ணீர் - 3/4 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சேமியாவை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் அதில் புளித்த தயிரை ஊற்றி, அத்துடன் 3/4 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி, அதை ஊறிய ரவையுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத தூவி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவை சேமியா பணியாரம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 30, 2024, 6:10 [IST]
Desktop Bottom Promotion