மழை நேரத்துல இப்படி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்...

Posted By:

Tomato Rasam Recipe In Tamil: தற்போது மழை பெய்து காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நன்கு சூடாகவும், காரசாரமாகவும் ரசத்தை வைத்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது இதமாக இருக்கும். ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தக்காளி ரசம்.

அதுவும் இந்த தக்காளி ரசத்தை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இப்படி செய்யும் தக்காளி ரசம் இன்னும் சுவையாக இருக்கும். முக்கியமாக தக்காளி ரசம் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும்.

Rasam Recipes How To Make a Tomato Rasam

உங்களுக்கு தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 3/4 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - பாதி பெரிய நெல்லிக்காய் அளவு (சிறிது நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

பொடி செய்வதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/4 டீஸ்பூன்
* கடுகு - 2 சிட்டிகை
* வெந்தயம் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 4
* இஞ்சி - சிறிது
* வரமிளகாய் - 1
* தக்காளி - 2
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 3 பல் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

* முதலில் பாதி எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 3/4 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சூடேற்ற வேண்டும்.
* மறுபுறம் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், பெருங்காய தூள், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, வரமிளகாய், 2 தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த தக்காளி விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து, அதோடு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூளை சேர்த்து, ஊற வைத்துள்ள புளியை கைகளால் நன்கு பிசைந்து, அந்த புளி நீரையும் சேர்த்து, நுரை கட்ட வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தக்காளி ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 22, 2025, 15:02 [IST]
Desktop Bottom Promotion