2 கப் ராகி மாவு இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை பசங்களுக்கு செஞ்சு கொடுங்க.. சத்தானதும் கூட...

Posted By:

Ragi Athirasam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் பசங்களுக்கு சத்தாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவு கொண்டு அதிரசம் செய்யுங்கள்.

இந்த ராகி அதிரசத்தை மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, பள்ளிக்கு ஸ்நாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம். அந்த அளவு இது ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். திடீரென்று ஏதாவது ஸ்வீட் சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால், அது சத்தானதாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

Ragi Athirasam How To Make a Ragi Athirasam Recipe

உங்களுக்கு ராகி அதிரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி அதிரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* வெள்ளை எள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* ராகி மாவு - 2 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் ராகி மாவை எடுத்து, அத்துடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் எள்ளு விதைகளை சேர்த்து, வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் மாவை நன்கு மென்மையாகவும், சற்று தளர்வாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்
* பிறகு ஒரு வாழை இலை அல்லது கவரை எடுத்து, அதில் சிறிது நெய் தடவிக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ளதை சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி அதிரசம் தயார். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Monday, September 9, 2024, 17:50 [IST]
Desktop Bottom Promotion