மதியம் டக்குன்னு 10 நிமிஷத்துல சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த குழம்பை செய்யுங்க...

Posted By:

Poosanikai Mor Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் அடிக்கும் வெயிலைக் கண்டால் சமையலறையில் நீண்ட நேரம் நின்று சமைக்க பிடிக்கவில்லையா? சீக்கிமாகவும், அதே சமயம் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும் வகையில் ஒரு சுவையான குழம்பை சாதத்துக்கு செய்ய நினைக்கிறீர்களா?

வீட்டில் 1 கப் தயிர் இருந்தால் போதும், அதைக் கொண்டு அருமையான மோர் குழம்பை செய்யலாம். அதுவும் வெள்ளைப் பூசணிக்காய் இருந்தால், அதையும் சேர்த்து பூசணிக்காய் மோர் குழம்பை செய்யலாம். இந்த குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

Pumpkin Mor Kuzhambu How To Make a Poosanikai Mor Kuzhambu Recipe

உங்களுக்கு பூசணிக்காய் மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூசணிக்காய் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 1 கப்
* வெள்ளை பூசணிக்காய் - 250 கிராம்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர் + தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எணணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 7 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் புளிப்பு இல்லாத கெட்டித் தயிரை எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மோர் போன்று மத்து கொண்டு கலந்துக் கொள்ள வேண்டும்.
* பின் 1 டீஸ்பூன் துவரம் பருப்பை நீரில் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கப்பட்ட வெள்ளைப் பூசணியை போட்டு, அத்துடன் 1 1/2 டம்ளர் நீர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, மூடி வைத்து 5 நிமிடம் பூசணிக்காயை வேக வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் 1/2 கப் தேங்காய், ஊற வைத்த துவரம் பருப்பு, இஞ்சி , பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காயில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, நன்கு வதக்கி கொதித்துக் கொண்டிருக்கும் பூசணிக்காயுடன் சேர்த்து கிளறி ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து கிளறினால், சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 10, 2025, 14:09 [IST]
Desktop Bottom Promotion