சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... புதினா பன்னீர் கிரேவி

உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் புதினா இருந்தால், அதைக் கொண்டு சுவையான புதினா பன்னீர் கிரேவி செய்யுங்கள்.

Posted By:

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் புதினா இருந்தால், அதைக் கொண்டு சுவையான புதினா பன்னீர் கிரேவி செய்யுங்கள். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Pudina Paneer Gravy Recipe In Tamil

உங்களுக்கு புதினா பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 200 கிராம்

* புதினா இலைகள் - 1 கப்

* தயிர் - 1/4 கப்

* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

வதக்கி அரைப்பதற்கு...

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 2 (நறுக்கியது)

* பூண்டு - 5 பல் (நறுக்கியது)

* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 4 (கீறியது)

* முந்திரி - 20

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் - 2

* கிராம்பு - 1

* பட்டை - 1 இன்ச்

* பிரியாணி இலை - 1

செய்முறை:

* முதலில் புதினாவை நீரில் கழுவி, ஒரு துணியில் போட்டு நன்கு உலர்த்த வேண்டும்.

* பின் ஓவனை 170 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ட்ரேயில் உலர்த்திய புதினாவைப் பரப்பி, ஓவனில் வைத்து 5 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

* பிறகு ட்ரேயை வெளியே எடுத்து, புதினாவைத் திருப்பிப் போட்டு, மீண்டும் ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்போது புதினா நன்கு மொறுமொறுவென்று இருக்கும். அதை அப்படியே எடுத்து, கையால் நசுக்கி பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு சுடுநீரில், பன்னீர் துண்டுகளைப் போட்டு ஊற வைக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் முந்திரியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கிளற வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதில் நசுக்கி வைத்துள்ள புதினா பொடியைத் தூவி கிளறி, 4-5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

* பின்னர் தயிரை நன்கு அடித்து ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். முக்கியமாக மசாலா அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடுங்கள்.

* இறுதியாக அதில் ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், புதினா பன்னீர் கிரேவி தயார்.

குறிப்பு:

உங்கள் வீட்டில் ஓவன் இல்லாவிட்டால், புதினாவை சூடான வாணலியில் போட்டு ஈரப்பதம் போக வறுத்து எடுத்து, பொடி செய்து கொள்ளலாம்.

Image Courtesy: rakskitchen

[ of 5 - Users]
Story first published: Thursday, December 22, 2022, 19:20 [IST]
Desktop Bottom Promotion