புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி... இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க... தோசை, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Pudalangai Poricha Kootu Recipe in Tamil: புடலங்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காய்கறிகளில் ஒன்றாகும். இதுவரை நீங்கள் புடலங்காயைக் கொண்டு குழம்பு, பொரியல் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த புடலங்காயை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரிச்ச கூட்டு செய்திருக்கிறீர்களா? உண்மைதான், புடலங்காயை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான பொரிச்ச கூட்டு செய்யலாம். இந்த புடலங்காய் பொரிச்ச கூட்டு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் புடலங்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு புடலங்காய் இந்த மாதிரி பொரிச்ச கூட்டு செய்து கொடுங்கள். இது நிச்சயம் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த புடலங்காய் கூட்டின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் சில பொருட்கள்தான்.

Pudalangai Poricha Kootu Recipe How to Make Pudalangai Poricha Kootu

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 கப் நறுக்கிய புடலங்காய்
- ½ கப் பாசிப்பருப்பு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கப் தண்ணீர் (காய்கறிகள் மற்றும் பருப்பை வேகவைக்க)
- 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு

அரைக்க:

- 1 ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் மிளகு
- 1 வர மிளகாய்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ¼ கப் தேங்காய்

செய்முறை:

- ஒரு குக்கரில் நறுக்கிய புடலங்காய், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, 1 கப் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

- 4 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் நன்கு வேகவைத்து தனியாக வைக்கவும்.

- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, மிளகு, சீரகம், 1 வர மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

- உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

- இதை ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு தேங்காயுடன் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- ஒரு கடாயில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

- கடுகு வெடித்ததும், ​​சமைத்து வைத்துள்ள பருப்பு-புடலங்காய் கலவையையும் சேர்த்து நன்கு கிளறவும்.

- பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

- தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

- இதை 3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கூட்டு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெடி.

[ of 5 - Users]
Story first published: Saturday, March 28, 2026, 14:18 [IST]
Desktop Bottom Promotion