புடலங்காயும், வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு அள்ளும்..

Posted By:

Pudalangai Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் புடலங்காயை சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை புடலங்காயை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் புடலங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து கூட்டு செய்யுங்கள். இந்த கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சுவையில் கூட்டு செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

{image-pudalangai-kootu-small-43771783071160jpg tamil.boldsky.com}

உங்களுக்கு புடலங்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புடலங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)
* புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 டம்ளர்

வறுத்து அரைப்பதற்கு...

* பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
* பூண்டு - 7 பெரிய பல்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புடலங்காயை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் புடலங்காயை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாயை சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் மற்ற பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை வெந்து கொண்டிருக்கும் புடலங்காயுடன் சேர்த்து கலந்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து,உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான புடலங்காய் கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, July 3, 2026, 15:08 [IST]
Desktop Bottom Promotion