1/2 கப் பொட்டுக்கடலை இருந்தா, இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்!

Posted By:

Pottukadalai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சைடு டிஷ் முடிவு செய்வது பெரிய வேலையாக இருக்குமா? முக்கியமாக இட்லி, தோசை என்றால் சட்னியை தான் அதிகம் செய்வீர்களா?

எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சட்னியை செய்யாமல் சற்று வித்தியாசமாக செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த பொட்டுக்கடலையை கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Pottukadalai Chutney How To Make Fried Gram Chutney For Idli Dosa

இந்த பொட்டுக்கடலை சட்னி குறித்து அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்டலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை இரு துண்டுகளாக்கி சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் 5 பல் பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி மென்மையானதும், பொட்டுக்கடலை சேர்த்து, 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த சட்னி நீர் போன்று இருந்தால் தான் நன்றாக இருக்கும். எனவே சற்று அதிகமாக நீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக சட்னியை தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 15, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion