2 கப் பொரி இருந்தா இந்த டிபனை செஞ்சு பாருங்க... சுவையாவும் இருக்கும், ஈஸியாவும் இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!

Posted By:

Pori Upma Recipe in Tamil: பொதுவாக பெரும்பாலான மக்கள் பார்த்து பயப்படும் ஒரு காலை உணவு என்றால் அது உப்புமாதான். ஆனால் சரியான முறையில் செய்து சரியான சைடிஷ் உடன் சாப்பிடும் போது உப்புமாவும் சிறந்த உணவாகத்தான் இருக்கும். பொதுவாக நாம் உப்புமா செய்யும் போது அதனை வெறும் ரவாவை வைத்து செய்வோம். உப்புமா போரான உணவாக இருக்க இதுவும் ஒரு காரணமாகும்.

உப்புமாவை வழக்கம் போல ரவையை வைத்து செய்யாமல் பொரியை வைத்து ஒருமுறை செய்து பாருங்கள். இந்த பொரி உப்புமா சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் அனைவருக்கும் பிடிக்கும் படி இருக்கும். இந்த பொரி உப்புமா, தென்னிந்தியாவில் பிரதானமான காலை உணவான உப்புமாவின் மறுவடிவமாகும். இதுபோல உப்புமா செய்து கொடுத்தால் உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். காரமான வேர்க்கடலை சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடும்போது இது சூப்பரான காலை உணவாக இருக்கும்.

Pori Upma Recipe How to Make Pori Upma

உங்களுக்கு பொரி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி உப்புமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்

- பொரி - 2 கப்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ஒரு ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- தக்காளி - 2
- உப்பு - தேவையான அளவு
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்

செய்முறை

- முதலில் பொரியை ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீருக்குள் போட்டு இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த பொரியை தண்ணீரில் இல்லாமல் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்

- பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

- பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

- வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வெங்காயம் தக்காளிக்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- பொரியில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் இந்த வெங்காயம் தக்காளிக்கு மட்டும் நம் உப்பு சேர்த்தால் போதும்.

- தக்காளி நன்றாக மசிந்து வரும் பொழுது இதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- மிளகாய் தூளின் பச்சை வாசனை நீங்கி எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிக் கொண்டே இருங்கள். எண்ணெய் தனியாக பிரிந்த பிறகு நாம் ஊற வைத்து எடுத்து வைத்த பொரியை இதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

- இவ்வாறு கிளரும் பொழுது மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். மசாலாவும் பொரியும் நன்றாக கலந்த பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான பொரி உப்புமா தயாராகிவிட்டது.

- இதை காலை நேர டிபனாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர ஸ்னாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion