இட்லி, தோசைக்கு ஒருவாட்டி பூண்டு புளி சட்னியை செய்யுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..

Posted By:

Poondu Puli Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் பூண்டு சட்னியை செய்யுங்கள்.

அதுவும் வழக்கமாக செய்யும் பூண்டு சட்னியை செய்யாமல், பூண்டு மற்றும் புளி சேர்த்து செய்யக்கூடிய பூண்டு புளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதென்று மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

Poondu Puli Chutney How To Make a Garlic Tamarind Chutney Recipe

உங்களுக்கு பூண்டு புளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு புளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்குவதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* பூண்டு - 12 பல்
* சின்ன வெங்காயம் - 6
* வரமிளகாய் - 7
* புளி - பெரிய எலுமிச்சை அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

அரைப்பதற்கு..

* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய் கொட்டை மற்றும் நார் நீக்கிய ஒரு பெரிய எலுமிச்சை அளவிலான புளி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயம் மற்றும் புளியின் நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* புளி நன்கு வதங்கியதும், அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள், 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதிக நீரை ஊற்றி அரைத்துவிட வேண்டாம்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பூண்டு புளி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 19, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion