பெருமாள் கோவில் புளியோதரை ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Perumal Kovil Puliyodharai Recipe In Tamil: புரட்டாசி மாதம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். பெருமாள் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அந்த கோவில் புளியோதரை தான். இந்த கோவிலில் கொடுக்கப்படும் புளியோதரை போன்று வேறு எங்கும் கிடைக்காது.

அந்த அளவில் இதன் சுவை தனித்துவமாக இருக்கும். உங்களுக்கு பெருமாள் கோவில் புளியோதரை ரொம்ப பிடிக்குமா? இதை சாப்பிடவே அந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வீர்களா? அப்படியானால் அந்த புளியோதரையை உங்கள் வீட்டிலேயே செய்யுங்கள். இந்த புளியோதரையின் தனித்துவமான சுவையின் ரகசியமே அதில் வறுத்து அரைத்து சேர்க்கப்படும் பொடியும், பக்குவமும் தான்.

Perumal Kovil Puliyodharai How To Make a Puliyodharai Recipe

உங்களுக்கு இந்த பெருமாள் கோவில் புளியோதரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெருமாள் கோவில் புளியோதரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சோனாமசூரி அரிசி/பொன்னி பச்சரிசி - 2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு...

* புளி - 60 கிராம்
* சுடுநீர் - 4 கப்

பிற பொருட்கள்...

* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கட்டிப் பெருங்காயம் - 2 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* வெல்லம் - சற்றுபெரிய துண்டு

வறுத்து அரைப்பதற்கு...

* வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1/4 கப்
* வேர்க்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

* முதலில் குக்கரில் சாதம் வைக்கும் பாத்திரத்தை எடுத்து, அதில் சோனாமசூரி அரிசியை 2 கப் எடுத்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற வீதத்தில் 4 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் ஊற்றி கலந்து, குக்கரில் சிறிது நீரை ஊற்றி, அந்த பாத்திரத்தை வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சாதத்தை ஒரு அகலமான தட்டில் போட்டு பரப்பி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை கைகளால் பிசைந்து நீரை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம், மிளகு, கடுகு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கட்டி பெருங்காயத்தை சேர்த்து பொரிய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் புளி நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு, அத்துடன் வறுத்த பெருங்காயத் தூள், வெல்லத்தை சேர்த்து, 10 நிமிடம் நன்கு ஓரளவு சுண்ட கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர வைத்த சாதத்துடன் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சீரகம், முழு வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்க வேண்டும்.
* அடுத்து அந்த சாதத்துடன் காய்ச்சி குளிர வைத்துள்ள புளியை சேர்த்து, அதோடு, தாளித்த பருப்புக்களை எண்ணெயோடு அப்படியே சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து 4 மணிநேரம் கழித்து பரிமாறினால், சுவையான பெருமாள் கோவில் ஸ்டைல் புளியோதரை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 22, 2025, 8:49 [IST]
Desktop Bottom Promotion