அடுத்தமுறை டீ போடும் போது இந்த ஒரு பொருளையும் சேர்த்து போட்டு பாருங்க.. சுவை நாக்கில் அப்படியே இருக்கும்...

Posted By:

Perfect Tea Recipe In Tamil: டீ போடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அனுபவசாலிகளுக்கு டீ போடுவது ஒரு பெரிய விஷயமல்ல தான். ஆனால் முதன்முதலாக சமையலறையில் நுழைந்து சமைக்க தொடங்கியிருப்பவர்களுக்கு டீ போடுவது கூட ஒரு பெரிய விஷயம் தான். பாலில் டீ தூளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், டீ தயார் என்று வாயில் சொல்லலாம். ஆனால் அப்படி போடும் டீயை யாரும் விரும்பி ரசித்து குடிக்கமாட்டார்கள்.

நீங்கள் போடும் டீயை அனைவரும் விரும்பி குடிக்க வேண்டுமா? அப்படியானால் டீ போடும் போது சரியான பக்குவத்தில் பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து, சரியான அளவு பால் மற்றும் நீரை சேர்த்து போட வேண்டும். அதுவும் டீ போடும் போது வெறும் டீத்தூளை மட்டும் சேர்க்காமல், அத்துடன் இஞ்சி, ஏலக்காயுடன், சிறிது ரோஜாப்பூ இதழையும் சேர்க்கும் போது, அந்த டீ சுவையாகவும் மணமாகவும் இருப்பதோடு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் உணர்வை அளிக்கும்.

Perfect Tea How To Make a Tasty And Perfect Tea Recipe

உங்களுக்கு நல்ல பர்பெக்ட்டான டீயை எப்படி போடுவதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நல்ல சுவையான மற்றும் பர்பெக்ட்டான டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* இஞ்சி - 2 துண்டு
* ஏலக்காய் - 2
* காய்ந்த ரோஜாப்பூ இதழ்கள் - சிறிது
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
* டீத் தூள் - 2 டீஸ்பூன்
* காய்ச்சிய கெட்டியான பால் - 1 டம்ளர்

செய்முறை:

* முதலில் இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி, ஏலக்காயை சேர்த்து, அத்துடன் காய்ந்த ரோஜாப்பூ இதழ்களையும் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 2 டீஸ்பூன் டீத்தூள் மற்றும் 4 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அதுவும் உயர் தீயில் வைத்து நீரானது 1 டம்ளர் அளவிற்கு வரும் அளவில் சுண்ட கொதிக்க வைக்க வேண்டும்.
* டிகாஷன் நன்கு சுண்ட கொதித்ததும், அதில் காய்ச்சிய கெட்டியான பாலை ஒரு டம்ளர் ஊற்றி கிளறி விட்டு, உயர் தீயில் வைத்து பொங்கி மேலே வரும் போது, தீயைக் குறைத்து, ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும்.
* பின் மீண்டும் உயர் தீயில் வைத்து, பொங்கி மேலே வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* இறுதியாக டீயை வடிகட்டினால், சுவையான மற்றும் மணமான டீ தயார்.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள டீக்கான பொருட்களின் அளவானது 2 டம்ளர் டீக்கு உரியது.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 25, 2024, 17:50 [IST]
Desktop Bottom Promotion