1 கப் பச்சரிசியும், 1/2 கப் வேர்க்கடலையும் வெச்சு இப்படி ஒருமுறை செய்யுங்க.. காலையில சாப்பிட நல்லா இருக்கும்..

Posted By:

Peanut Paniyaram Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சுவையான, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் பச்சரிசியையும், வேர்க்கடலையையும் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு பணியாரத்தை செய்யுங்கள்.

அதுவும் இந்த பணியார மாவுடன் பிடித்த காய்கறிகளை துருவிப் போட்டு கலந்து பணியாரம் சுட்டு கொடுங்கள். இதனால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். இந்த பணியாரத்தை கார சட்னி, தக்காளி சட்னியுடன் மட்டுமின்றி, சட்னி இல்லாமல் கூட சாப்பிடலாம்.

Peanut Paniyaram How To Make a Peanut Paniyaram Recipe

உங்களுக்கு வேர்க்கடலை பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப்
* பச்சை வேர்க்கடலை - 1/2 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கார்ன் - 1/2 கப்
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சரிசி மற்றும் பச்சை வேர்க்கடலையை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, 2-3 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 2-3 மணிநேரம் கழித்து, அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் அரிசி மற்றும் வேர்க்கடலையை சேர்த்து, நீர் அதிகம் ஊற்றாமல், சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சீரகம், சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், துருவிய கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெயை கொஞ்சம் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, முன்னும், பின்னும் நன்கு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான வேர்க்கடலை பணியாரம் தயார்.

Image Courtesy: Kannamma Cooks

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 20, 2024, 22:14 [IST]
Desktop Bottom Promotion