1 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு செமயா இருக்கும்..

Posted By:

Peanut Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை, சப்பாத்தி செய்வீர்களா? ஆனால் அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இதுவரை நீங்கள் செய்து கொடுக்காத சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அந்த வேர்க்கடலையைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இந்த வேர்க்கடலை கிரேவி அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடவை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Peanut Gravy How To Make a Peanut Gravy Recipe

தேவையான பொருட்கள்:

* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
* சுடுநீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 6-7
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ஏலக்காய் - 1
* பூண்டு - 5-6 பல்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் 1 கப் வறுத்த வேர்க்கடலையை 1 கப் சுடுநீரில் போட்டு மூடி வைத்து, சுமார் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்து ஊற வைத்த வேர்க்கடலையை நீருடன் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, கூடுதலாக 1/2 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி, வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி, தேங்காய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஏலக்காய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 2 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வேர்க்கடலை கிரேவி தயார்.

Image Courtesy: Akshaya. com

[ of 5 - Users]
Story first published: Thursday, May 16, 2024, 20:47 [IST]
Desktop Bottom Promotion