சளி, இருமலை உடனே சரிசெய்யும்.. சத்தான.. பருத்திப் பால் - செய்வது எப்படி?

Posted By:

Paruthi Paal In Tamil: பருத்தி பால் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு பானம். இது பருத்தி கொட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பருத்தி பால் மிகவும் சத்தானது. ஏனெனில் இதில் புரோட்டீன், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் சர்க்கரை போன்றவை அதிகமாக உள்ளன. இந்த பால் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கக்கூடியது.

சொல்லப்போனால் பருத்தி பாலானது சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். முக்கியமாக இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது மிகவும் நல்லது. பால் குடிக்க பிடிக்காதவர்கள் அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மையை கொண்டவர்கள் பருத்தி பாலைக் குடிக்கலாம்.

Paruthi Paal Recipe In Tamil

அதோடு பருத்தி பால் குடிப்பதால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயம் தொடர்பான பிரச்சனைகள், வயிற்று அல்சர் போன்றவற்றை தடுக்கும். இவ்வளவு நன்மைகளைக் கொண்ட பருத்தி பாலை இதுவரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி குடித்திருப்பீர்கள். ஆனால் இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் குடிக்கலாம் அல்லவா?

உங்களுக்கு பருத்தி பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருத்தி பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பருத்தி கொட்டை - 2 கப்
* பச்சரிசி - 1 கப்
* வெல்லம் - 1 கப்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் பருத்தி கொட்டையை நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய பருத்தி கொட்டையை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் பச்சரிசியையும் நீரில் கழுவி, அதையும் இரவு முழுவதும் ஊறு வைக்க வேண்டும்.
* பின்பு மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருத்தி கொட்டை மற்றும் பச்சரிசியை சேர்த்து, நீரை சிறிது ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துள்ள பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து 8-10 நிமிடம் தொடர்ந்து கிறவி விட்டு கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு கிளறி, 4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பருத்தி பால் தயார்.

குறிப்பு:

* பருத்தி கொட்டையை ஊற வைத்த பின் கழுவாமல், ஊற வைப்பதற்கு முன்பே 3-4 முறை நன்கு கழுவி விடுங்கள்.
* பருத்தி கொட்டை நன்கு ஊறினால் தான் அதை அரைக்க வசதியாக இருக்கும்.
* வெல்லம் சேர்க்க பிடிக்காதவர்கள், கருப்பட்டியை கூட சேர்க்கலாம்.
* தேங்காய் பாலை ஊற்றிய பின், சிறிது துருவிய தேங்காயை சேர்த்துக் கொண்டால், பருத்தி பால் இன்னும் சுவையாக இருக்கும்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Monday, July 24, 2023, 14:10 [IST]
Desktop Bottom Promotion