செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...

Posted By:

Paruppu Rasam Recipe By Chef Damu: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் வைப்பீர்களா? ஆனால் என்ன தான் பார்த்து பக்குவமாக வைத்தாலும் உங்கள் ரசம் மட்டும் சுவையாக இருப்பதில்லையா? மேலும் நீங்கள் எப்போதும் புளி சேர்த்து தான் ரசம் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை புளி சேர்க்காமல் ரசம் செய்யுங்கள்.

Paruppu Rasam How To Make Paruppu Rasam Recipe By Chef Damu

என்னது புளி சேர்க்காமல் ரசமா என்று கேட்கலாம். புளியை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லதல்ல. அது இரத்தத்தைத் தான் சுண்ட செய்யும். எனவே ரசத்தின் புளிப்பு சுவைக்கு தக்காளியே போதுமானது. சரி, புளி சேர்க்காமல் எப்படி ரசம் வைப்பது என்று கேட்கலாம்.

கின்னஸ் சாதனை படைத்த மிகவும் பிரபலமான செஃப்பான தாமு அவர்கள், புளி சேர்க்காமல் செய்யக்கூடிய பருப்பு ரசம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு செஃப் தாமு அவர்களின் பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தாமு அவர்களின் பருப்பு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1/4 கப் அல்லது 50 கிராம்
* தக்காளி - 3
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* கொத்தமல்லி - 1 கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அதில் 200 மிலி நீரை ஊற்றி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் 1 தக்காளியை நறுக்கிய சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள தக்காளியை நறுக்கி சேர்த்து, அத்துடன் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு பிசைந்து, தக்காளியின் தோலை நீக்கி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து குக்கரை திறந்து, அதில் உள்ள வேக வைத்த பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மசித்த பருப்பை கொதித்துக் கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்க்க வேண்டும்.
* அதற்குள் இடி உரலில் பூண்டு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடித்த பூண்டு கலவையை அடுப்பில் உள்ள ரசத்துடன் சேர்த்து, லேசாக நுரைக்கட்டி வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பருப்பு ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, April 24, 2026, 12:40 [IST]
Desktop Bottom Promotion