பச்சை பயறை வெச்சு ஒருமுறை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்..

Posted By:

Pacha Payaru Gravy Recipe In Tamil: தினமும் சாதத்திற்கு ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் ருசியாகவும் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா?

அப்படியானால் அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த பச்சை பயறு கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Pacha Payaru Gravy How To Make a Green Gram Gravy With Coconut Milk Recipe

உங்களுக்கு பச்சை பயறு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு - 1 கப்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 5 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் ஒன்றிரண்டாக தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி ஒரு கொதி வந்ததும், 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, முதலில் குறைவான தீயில் வைத்து 3 விசில் விட வேண்டும். பின் உயர் தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பச்சை பயறு கிரேவி தயார்.

Image Courtesy: Annai Samayal

[ of 5 - Users]
Story first published: Monday, March 18, 2024, 14:04 [IST]
Desktop Bottom Promotion