க்ரீமி கடாய் சிக்கன்

By Maha

வார இறுதி நாட்களில் வாய்க்கு சுவையாக சமைத்து சாப்பிட விருப்பமா? அதிலும் உங்கள் சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியமா? அப்படியானால் கடைகளில் விற்கப்படும் கடாய் சிக்கனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இதன் செய்முறை பெரியதாக இருந்தாலும், பொறுமையுடன் சமைத்தால், மன நிறைவைத் தரும் வகையிலான சுவை கிடைக்கும்.

இங்கு அந்த க்ரீமி கடாய் சிக்கன் ரெசிபியின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை விடுமுறை நாட்களில் முயற்சித்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

Creamy Kadai Chicken Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 5 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
அரைத்த தக்காளி - 2 டேபிள் 1பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

ஊற வைப்பதற்கு...

தயிர் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, தீயை அதிகரித்து 8-10 நிமிடம் பிரட்டி விட்டு வேக வைக்க வேண்டும்.

சிக்கனில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், தீயை குறைத்து, அதில் கரம் மசாலா சேர்த்து கிளறி, பின் குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், வாணலியை இறக்கி, அதன் மேல் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், க்ரீமி கடாய் சிக்கன் ரெடி!!!

Story first published: Sunday, June 8, 2014, 12:18 [IST]
Desktop Bottom Promotion