மண மணக்கும் செட்டிநாடு மட்டன் குழம்பு

By Mayura Akilan

Mutton
மட்டன் குழம்பு என்றாலே அது செட்டிநாட்டு மட்டன் குழம்பு தான், அந்த அளவிற்கு சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். காரமான குழம்பை சாப்பிட நினைப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம். சரி தேவையான பொருட்களுக்கு போவோம்.

தேவையான பொருட்கள்

மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, கிராம்பு கருவேப்பில்லை
தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையானவை :

மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.

ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம். சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு தயார்.

Story first published: Tuesday, March 6, 2012, 12:52 [IST]
Desktop Bottom Promotion