செட்டிநாடு எலும்பு குழம்பு

By Mayura Akilan

Chettinad Elumbu Kuzhambu
செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

எலும்பு கறி - அரைக்கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 2

மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்

மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன்

தேங்காய் பால் — 1 கப்

எண்ணைய் — 1 1/2 ஸ்பூன்

பட்டை — 1 அங்குலம் அளவு

கிராம்பு — 4

கறிவேப்பிலை ஒரு கொத்து

எலும்பு குழம்பு செய்முறை

குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும். அப்பொழுதுதான் கறியில் உப்பு பிடிக்கும். பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும்.

5 விசில் வரை விடவும் அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும். விசில் இறங்கிய உடன் சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடலில் சத்து சேர்க்க இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள். அதேபோல் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இந்த எலும்பு குழம்பு சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்றும் கிராமப் பகுதிகளில் கூறுவார்கள்.

Story first published: Tuesday, May 8, 2012, 14:06 [IST]
Desktop Bottom Promotion