மழை நேரத்தில் இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..

Posted By:

Nellikai Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் வைப்பீர்கள். எப்போதும் ஒரே மாதிரியான ரசம் தான் வைப்பீர்களா? அப்படியே வித்தியாசமாக வைத்தாலும், மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் என்று தான் வைப்பீர்களா? அதுவும் தற்போது அடிக்கடி மழை பெய்வதால், சளி, இருமல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள்.

உங்கள் வீட்டிலும் அப்படி சளி, இருமலால் அவதிப்படுகிறார்களா? அப்படியானால் நெல்லிக்காய் வாங்கி வந்து ரசம் செய்து கொடுங்கள். இப்படி ரசம் செய்தால், அது சுவையாக இருப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமலில் இருந்து விடுவிக்கும். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

Nellikai Rasam How To Make a Amla Rasam Recipe

உங்களுக்கு நெல்லிக்காய் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லிக்காய் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 கப்

அரைப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6-7 பல்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

பிற பொருட்கள்...

* பெரிய நெல்லிக்காய் - 3 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் 1 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளியை எடுத்து, அத்துடன் கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மிளகு கலவையை சேர்த்து, பருப்பு வேக வைத்த நீரை மட்டும் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து கிளறி விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நெல்லிக்காயை துண்டுகளாக்கி, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பிசைந்து வைத்துள்ள தக்காளி கலவையை ஊற்றி, கூடுதலாக ஒரு 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் வேக வைத்துள்ள பருப்பில் சிறிது நீரை ஊற்றி நன்கு மசித்து சேர்த்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு தூவி, நுரைக்கட்ட வைக்க வேண்டும்.
* ரசம் நுரை கட்டியதும், அதில் கொத்தமல்லி மற்றும் அரைத்த நெல்லிக்காயை சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, ரசத்தை கீழே இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், சுவையான நெல்லிக்காய் ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 26, 2025, 13:43 [IST]
Desktop Bottom Promotion