நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்

Posted By:

Nanjil Puli Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் இந்த நாகர்கோவில் ஸ்டைல் புளிக்கறி குழம்பை முயற்சி செய்து பாருங்கள். நாகர்கோவில் ரெசிபிக்கள் எப்போதும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.

Nanjil Puli Kulambu Recipe How to Make at Home in Tamil

இந்த புளிக்கறி குழம்பு செய்வது மிகவும் எளிதானது, அதிலும் கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து செய்யும்போது இந்த குழம்பின் சுவை மேலும் அதிகரிக்கும். இந்த குழம்பு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. தனியாக மசாலா அரைத்து காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படும் இந்த நாகர்கோவில் புளிக்கறி குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு நாகர்கோவில் ஸ்டைல் புளிக்கறி புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாகர்கோவில் புளிக்கறி குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- நடுத்தர எலுமிச்சை அளவு புளி
- முருங்கைக்காய் - 2
- கத்தரிக்காய் - 2
- மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு

தேங்காய் விழுது அரைக்க:

- 1/2 கப் துருவிய தேங்காய்
- 5 வர மிளகாய்
- 7 சின்ன வெங்காயம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் சீரகம்

தாளிக்க:

- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை:

- புளியை சுடுநீரில் ஊறவைத்து, அரை கப் தண்ணீர் சேர்த்து அதன் சாற்றைப் பிழிந்து எடுக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், வர மிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து, கால் கப் தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்.

- ஒரு அடி கனமானபாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காயைச் சேர்க்கவும்.

- அதில் 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். காய்கறிகள் மென்மையாகும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.

- காய்கறிகள் வெந்ததும் இதனுடன் புளிக் கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- குழம்பு கொதிக்கத் தொடங்கியதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் 1/4 கப் தண்ணீரையும் சேர்க்கவும்.

- இதை மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இந்த நிலையில், அரை ஸ்பூன் மிளகாய் தூளைத் தூவவும்.

- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, அதில் வெந்தயம், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- அவை பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு,

- அந்தத் தாளிப்பைச் சூடான புளிக் குழம்பில் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலந்து, 10 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான நாகர்கோவில் புளிக்கறி குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 16, 2026, 22:23 [IST]
Desktop Bottom Promotion