ராகி மாவும், முருங்கைக்கீரையும் வெச்சு.. இப்படி அடை செஞ்சு பாருங்க.. சும்மா அல்டிமேட்டா இருக்கும்..

Posted By:

Murungai Keerai Ragi Adai Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சத்தான ருசியான ஒரு டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? வீட்டில் ராகி மாவும், முருங்கைக்கீரையும் உள்ளதா?

அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த அடைக்கு கெட்டியான தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடும் போது, சுவை அல்டிமேட்டாக இருக்கும். முக்கியமாக இப்படி அடை செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Murungai Keerai Ragi Adai How To Make a Murungai Keerai Kelvaragu Adai

உங்களுக்கு முருங்கைக்கீரை ராகி அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை ராகி அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 2 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு

இடிப்பதற்கு...

* சீரகம் - 1 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/2 கப்

சட்னிக்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 4
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் இடிகல்லில் சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இடித்து வைத்துள்ளதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து, வதக்கி வைத்துள்ள முருங்கைக்கீரை கலவையை சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி அடை போன்று தட்டிப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முருங்கைக்கீரை ராகி அடை தயார்.
* இந்த அடைக்கு ஒரு கெட்டி தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். அந்த சட்னிக்கு ஒரு மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றி விட வேண்டாம்.
* பின் அந்த சட்னியை தாளிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 4, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion