1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..

Posted By:

Masala Semiya Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான சுவையில் காலை டிபன் சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியா உள்ளதா? அப்படியானால் அந்த சேமியாவை எப்போதும் போன்று உப்புமா செய்யாமல், ஒருமுறை தனித்துவமான மசாலா அரைத்து சேர்த்து மசாலா தேங்காய் சேமியா செய்யுங்கள். இந்த சேமியா வெறுமனே சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சேமியாவை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

Masala Semiya How To Make Masala Coconut Sevai Recipe

உங்களுக்கு இந்த மசாலா தேங்காய் சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா தேங்காய் சேமியா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* அரிசி சேமியா - 1 பாக்கெட் அல்லது 200 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர்

மசாலா அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 3
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தேங்காய் - 1/2 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (உடைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த சேமியா

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு கொதித்த சுடுநீரை எடுத்துக் கொண்டு, அதில் 1 பாக்கெட் அரிசி சேமியாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது, சேமியா நன்கு வெந்துவிடும்.
* பின் நீரை வடிகட்டிவிட்டு, சேமியாவை தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை உடைத்து சேர்த்து கிளறி, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரிசி சேமியாவை சேர்த்து நன்கு 5-10 நிமிடம் மென்மையாக கிளறி இறக்கினால், சுவையான மசாலா தேங்காய் சேமியா தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 18, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion