பொங்கலுக்கு வாங்குன மஞ்ச கொத்து இலையை தூக்கி போடாம.. இப்படி ரசம் செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட..

Posted By:

Manjal Ilai Rasam Recipe In Tamil: பொங்கலுக்கு வாங்குன மஞ்சள் கொத்து இலை உள்ளதா? அதை எப்பவும் தூக்கி போடுவீங்களா? அப்ப ஒருடைம் அந்த இலையை வெச்சு ரசம் செஞ்சு சாப்பிடுங்க.. இது ருசியாகவும் இருக்கும், சத்தானதும் கூட.

முக்கியமாக இந்த ரசம் சளி, இருமலால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் அடிக்கடி இந்த ரசத்தை செய்து சாப்பிட்டால், சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த ரசத்தை சூடான சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது சூப்பாகவும் குடிக்கலாம்.

Manjal Ilai Rasam How To Make a Manjal Ilai Rasam Recipe

உங்களுக்கு மஞ்சள் இலை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் இலை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் (வேக வைத்து மசித்தது)
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

இடிப்பதற்கு..

* மஞ்சள் இலை - 3
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பூண்டு - 8 பல்
* மிளகு - 1 ஸ்பூன்
* சீரகம் - 3/4 ஸ்பூன்
* கடுகு - 2 சிட்டிகை
* வெந்தயம் - 1 சிட்டிடகை
* பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் இடி கல்லில் மஞ்சள் இலையை நறுக்கி சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு இடித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே இடி கல்லில் மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு இடித்து, அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் புளி சாற்றினை எடுத்து, அத்துடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அத்துடன் கடுகு சேர்த்து தாளித்து, பின் இடித்து வைத்துள்ள மஞ்சள் இலை மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இடித்து வைத்துள்ள மிளகு மசாலாவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி நுரைக்கட்டும் வரை சூடேற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, ரசத்தை 1 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மஞ்சள் இலை ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 17, 2026, 14:20 [IST]
Desktop Bottom Promotion