மழை நேரத்துல இந்த சூப்பை அடிக்கடி செஞ்சு குடிங்க.. நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்..

Posted By:

Manathakkali Keerai Thengaipaal Soup Recipe In Tamil: மழைக்காலம் தொடங்கிவிட்டது. காலநிலையானது மப்பும் மந்தாரமுமாய் உள்ளது. இப்படி மழை பெய்து காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் விரைவில் அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.

எனவே மழைக்காலத்தில் குழந்தைகளுக்கும் சரி, வீட்டில் உள்ள முதியவர்களுக்கும் சரி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்படியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட கொடுக்க வேண்டும். அதுவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சூப் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் சூப்பாக குடிக்கும் போது, சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

Manathakkali Keerai Thengaipaal Soup How To Make a Manathakkali Keerai Soup

அப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு அற்புதமான சூப் தான் மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சூப். இந்த சூப் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, வயிற்று புண்ணையும் ஆற்றும். இந்த சூப்பை வாரத்திற்கு 3 முறை செய்து குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும். முக்கியமாக இந்த சூப் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* பூண்டு - 4 பல் (தட்டி வைத்தது)
* மணத்தக்காளி கீரை - 1 கட்டு (நறுக்கியது)
* அரிசி கழுவிய நீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால் - 1 கப் (அரை மூடி தேங்காயை அரைத்து பால் எடுத்தது)

செய்முறை:

* முதலில் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து நறுக்கி, நீரில் 2 முறை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள மணத்தக்காளி கீரையை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரிசி ஊற வைத்து கழுவிய நீரை 2 கப் ஊற்றி கிளறி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, 4 நிமிடம் கீரையை நன்கு வேக வைக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி விட வேண்டும்.
* இறுதியாக அதில் தேங்காய் பாலை சேர்த்து 2 முறை கிளறி, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சூப் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 14, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion