மகா சிவராத்திரி ஸ்பெஷல் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Maha Shivratri 2026 Special Sweet Potato Payasam Recipe: மகா சிவராத்திரி வரப்போகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் சிவனின் ஆசியை பெற விரதமிருந்து பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும் போது சிவனுக்கு ஒருசில பிரசாதங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். அதுவும் இந்த மகா சிவராத்திரி நாளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சமைப்பார்கள்.

அதுவும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெறுமனே வேக வைக்காமல், அதைக் கொண்டு பல்வேறு ரெசிபிக்களை செய்தும் சிவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். அதில் ஏற்கனவே சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொண்டு செய்யக்கூடிய போளி குறித்து பார்த்துவிட்டோம். இன்று சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொண்டு தயாரிக்கும் பாயாசம் குறித்து தான் பார்க்கப் போகிறோம். இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபம் மற்றும் ருசியானதும் கூட.

Maha Shivratri 2026 Special Recipe How To Make Sweet Potato Payasam

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1-2
* நைலான் ஜவ்வரிசி - 1/2 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன் + 3 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சிய பால் - 3 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10

செய்முறை:

* முதலில் நைலான் ஜவ்வரிசியை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடானதும், துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி, காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி, சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைக்க வேண்டும்.
* கிழங்கு நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, ஏலக்காய் தூளை சேர்த்து, நன்கு 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பாயாசம் சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, பாயாசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, February 13, 2026, 19:46 [IST]
Desktop Bottom Promotion