மதுரை பூண்டு கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது..

Posted By:

Madurai Poondu Kara Chutney Recipe In Tamil: தற்போது மழை பெய்து காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்வீர்களானால், இந்த காலநிலைக்கு சுறுக்கென்று காரமாக சைடு டிஷ் இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி கார சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை கார சட்னியை செய்வதாக இருந்தால், மதுரை பூண்டு கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Madurai Poondu Kara Chutney How To Make a Madurai Garlic Kara Chutney

முக்கியமாக இந்த சட்னியை செய்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த சட்னி வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்னி. இப்படிப்பட்ட சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.

உங்களுக்கு இந்த மதுரை பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பூண்டு - 30 பல்
* சின்ன வெங்காயம் - 5
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி வரமிளகாய் - 8
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் 30 பல் பூண்டு, 5 சின்ன வெங்காயம், 6 வரமிளகாய் மற்றும் 8 காஷ்மீரி வரமிளகாய் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 பெரிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, ஜாரில் சிறிது எண்ணெய் ஊற்றி அலசி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மதுரை பூண்டு கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 22, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion