கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Kerala Style Nadan Chicken Curry Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் இட்லி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக மட்டன் அல்லது சிக்கனை செய்து சாப்பிட்டு, தினத்தை சிறப்பாக தொடங்குவோம். இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் இட்லிக்கு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், ஒருமுறை கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறியை செய்யுங்கள். இந்த கறி இட்லி, தோசை, இடியாப்பம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

Kerala Style Nadan Chicken Curry How To Make Nadan Kozhi Curry Recipe

உங்களுக்கு இந்த கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதன்று தெரிந்து கொள்ளவேண்டுமா? கீழே நாடன் சிக்கன் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கரம் மசாலா அரைப்பதற்கு...

* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 2
* பட்டை - 1 சிறிய துண்டு

நாடன் சிக்கன் கறிக்கு...

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* மிளகு - சிறிது
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சிக்கன் - 1 கிலோ
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்த கரம் மசாலா
* கெட்டியான தேங்காய் பால் - 2 கப்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் சீவல் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கரம் மசாலா அரைக்க தேவையான பொருட்களான சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் சேர்த்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, மிளகு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10-15 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் மிளகுத் தூள், அரைத்த கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1 கப் நீரை சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக குழம்பு தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் சீவலை சேர்த்து அத்துட கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்தால், சுவையான கேரளா ஸ்டைல் நாடன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, August 9, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion