இந்த சுவையான கருப்பு உளுந்து சட்னியை அடிக்கடி சாப்பிட்டால் எலும்பு இரும்பு போல மாறுமாம்... ட்ரை பண்ணி பாருங்க!

Posted By:

Karupu Ulunthu Chutney Recipe in Tamil: உளுந்து நாம் எப்போதும் வீட்டில் தோசை மாவிற்கு பயன்படுத்துவோம். தினசரி உணவில் தாளிக்க பயன்படுத்துவோம். இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இதில் அதிக அளவில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இது உடல் எடை குறைப்பிற்கு, சரும ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறப்பான பொருள். மேலும் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. நாள் முழுவதும் வீட்டில் அலுவலகத்தில் என வேலை பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கான சிறந்த மருந்தாக செயல்படுவதோடு எலும்புகளையும் பலப்படுத்துகிறது. அதெல்லாம் சரி, இப்போ அதுக்கு என்னனு கேட்டிங்கன்னா? ஒன்னும் இல்லங்க இன்னைக்கு உளுந்த முக்கிய பொருளா வச்சுதான் இங்க சட்னி பார்க்க போறோம்.

Karupu Ulunthu Chutney Recipe How to Prepare Karupu Ulunthu Chutney

தேவையான பொருட்கள்:

- கருப்பு உளுந்து - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- வரமிளகாய் - 4
- சின்ன வெங்காயம் - 20 -25
- தக்காளி - 2
- தேங்காய் - ¼ மூடி
- கருவேப்பிலை - சிறிதளவு
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
- தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் கருப்பு உளுந்தை சேர்த்து நன்றாக சிவந்து மணம் வரும் வரை வதக்கவும்.
- கருப்பு உளுந்து இல்லை என்றால் வீட்டில் தோசை மாவிற்கு பயன்படுத்தும் உளுந்தையும் சேர்த்து கொள்ளலாம்.
- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக கிளறி வேக விடவும்.
- தக்காளி அரைப்பதம் வதங்கியதும் அதனுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி தக்காளி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
- பின் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- பின் வாணெலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தாளிக்க எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- கடைசியாக அதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து சட்னியின் மீது கொட்டி கிளறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து சட்னி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 3, 2024, 18:30 [IST]
Desktop Bottom Promotion