காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..

Posted By:

Karaikudi Chettinad Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் சாம்பார் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சாம்பார் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை காரைக்குடி செட்டிநாடு சாம்பார் செய்யுங்கள். இந்த பக்குவத்தில் ஒருமுறை சாம்பார் செய்யும் போது, சற்று புதுவிதமான சுவையில் இருப்பதால், வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முக்கியமாக இப்படி சாம்பார் செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறலாம்.

Karaikudi Chettinad Sambar How To Make Chettinad Style Sambar Recipe

உங்களுக்கு இந்த காரைக்குடி செட்டிநாடு சாம்பார் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி செட்டிநாடு சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சோம்பு - 5 கிராம்
* சீரகம் - 5 கிராம்
* வெந்தயம் - 3 கிராம்
* கடுகு - 5 கிராம்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1
* எண்ணெய் - 100 மிலி
* நெய் - 25 மிலி
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காரைக்குடி மசாலா - 2 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 50 கிராம்
* துவரம் பருப்பு - 120 கிராம்
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 3 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* புளி - 20 கிராம் (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* கேரட் - 1 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* மாங்காய் - பாதி (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் முருங்கைக்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கத்திரிக்காய், கேரட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் மூடி வைத்து காய்கறிகளை முக்கால் வாசி வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காரைக்குடி மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, அதன் பின் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, மாங்காயை சேர்த்து கிளறி, மூடி வைத்து நன்கு 5-10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து கிளறி, அதில் நெய்யை ஊற்றி கலந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காரைக்குடி செட்டிநாடு சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 3, 2026, 13:40 [IST]
Desktop Bottom Promotion