கந்த சஷ்டி ஸ்பெஷல் முருகனுக்கு பிடித்த கந்தர் அப்பம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Kanda Sashti Special Kandar Appam Recipe In Tamil: நாளை கந்த சஷ்டி விரதத்தின் கடைசி நாள். என்ன தான் மாதம் ஒருமுறை சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் சஷ்டி மிகவும் விஷேசமானது.

இந்நாளில் தான் சிவபெருமானின் சக்தியிலிருந்து தோன்றிய முருகப் பெருமான், சூரபத்மனை வதம் செய்து தேவர்களை காத்தார். இந்த கந்த சஷ்டி நாளில் மக்கள் விரதமிருந்து, முருகப்பெருமானுக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து, சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

Kanda Sashti Special Recipe How To Make a Kandar Appam

இந்த கந்த சஷ்டி விரதத்தின் போது முருகப்பெருமானுக்கு பிடித்த பலகாரத்தை நீங்களும் செய்ய நினைத்தால், கந்தர் அப்பத்தை செய்யுங்கள். இந்த அப்பம் செய்வது மிகவும் சுலபம். பச்சரிசியும் வாழைப்பழமும் இருந்தால், டக்கென்று செய்துவிடலாம்.

உங்களுக்கு முருகனுக்கு பிடித்த கந்தர் அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கந்தர் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொடித்த வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* பச்சரிசி - 1 கப்
* வாழைப்பழம் - 1
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் கழுவி, பின் அதில் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 3/4 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து, அத்துடன் 1 வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காயை 1/2 கப் சேர்த்து, அதோடு ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* மாவானது நன்கு மென்மையானதும், அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிக்சர் ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவு பதம் என்றால், மாவானது மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நீராகவும் இருக்கக்கூடாது.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து, எண்ணெயில் நேரடியாக ஊற்ற வேண்டும். மாவானது பொரிந்து உப்பி மேலே வந்ததும், அடுத்த கரண்டி மாவை ஊற்ற வேண்டும். இப்படி மாவை ஊற்றி, எண்ணெயை அப்பத்தின் மேல் அள்ளி அள்ளி ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், ஸ்வீட் அப்பம் அல்லது கந்தர் அப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 26, 2025, 20:13 [IST]
Desktop Bottom Promotion