வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது...

Posted By:

Kambu Adai Dosa Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசிக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கம்பு உள்ளதா? அப்படியானால் அந்த கம்பு கொண்டு அருமையான சுவையில் அடை தோசை சுடுங்கள்.

Kambu Adai Dosa How To Make Pearl Millet Adai Dosa Recipe

இந்த கம்பு அடை தோசை சுவையாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களைக் கொண்டது. முக்கியமாக இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வராது. இந்த கம்பு அடை தோசையை வாரம் ஒருமுறை சாப்பிட, எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

இந்த கம்பு அடை தோசை குறித்து அபூர்வாஸ் நளபாகம் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கம்பு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைத்து அரைப்பதற்கு...

* கம்பு - 1 கப்
* வரமிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் கம்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, கம்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் கம்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு, ஒருமுறை அரைக்க வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லி மற்றும் நறுக்கிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்த கம்புடன் சேர்த்து நன்கு கிளறி, அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள அடை மாவை தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கம்பு அடை தோசை தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion