இட்லிக்கு ஒருடைம் இந்த கையேந்தி பவன் கருப்பு உளுந்து கார சட்னியை செய்யுங்க.. டேஸ்ட்டா இருக்கும்..

Posted By:

Kaiyendhi Bhavan Karuppu Ulunthu Chutney: காலையில் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு அல்டிமேட்டான சட்னி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கருப்பு உளுந்து கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி கையேந்தி பவனில் அதிகம் கிடைக்கும்.

இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Kaiyendhi Bhavan Karuppu Ulunthu Chutney How To Make a Karuppu Ulunthu Chutney

உங்களுக்கு கையேந்தி பவன் கருப்பு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கருப்பு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 8 பல்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு உளுந்து சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, கல் உப்பு தூவி வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, வதக்கியதை குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கையேந்தி பவன் கருப்பு உளுந்து சட்னி தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Monday, September 2, 2024, 7:05 [IST]
Desktop Bottom Promotion