இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் கதம்ப சட்னி.. எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Kadhamba Chutney Recipe In Tamil: எத்தனை சட்னி தெரிந்தாலும், காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று ஒவ்வொரு நாளும் யோசிப்போம். நீங்களும் அப்படி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னியை செய்யாமல், ஒருமுறை கதம்ப சட்னியை செய்யுங்கள்.

இந்த கதம்ப சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Kadhamba Chutney How To Make a Kadhamba Chutney Recipe

உங்களுக்கு கதம்ப சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கதம்ப சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* வரமிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 2
* புளி - சிறிய துண்டு
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
* பின்பு நறுக்கிய தக்காளி, புளி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து லேசாக கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கதம்ப சட்னி தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Tuesday, July 23, 2024, 7:03 [IST]
Desktop Bottom Promotion