ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Instant Rava Adai With Tomato Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை மாவு இல்லையா? சட்டென்று ஒரு டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் ரவா உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு இன்ஸ்டன்ட் ரவா அடையை செய்யுங்கள். அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னி பிரமாதமாக இருக்கும். இந்த டிபன் காம்போவை செய்தால் வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Instant Rava Adai With Tomato Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு ரவா அடையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா அடை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* வறுத்த ரவை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்

அடை தோசைக்கு..

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 12 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 3 கொத்து
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வறுத்த ரவை, சுவைக்கேற்ப உப்பு, தயிர் மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து, மிளகாய் தூளின் பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய் மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து, 1 கொதி விட்டு இறக்கினால், சுவையான தக்காளி சட்னி தயார்.
* பின்பு ஊற வைத்த ரவையை கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய கேரட்டை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை கல்லில் 2 கரண்டி ஊற்றி, அடை போன்று ஓரளவு தடிமனாக சுட்டு, எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக வைத்து இறக்கினால், சுவையான ரவா அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, June 19, 2026, 6:41 [IST]
Desktop Bottom Promotion